Saturday 25 August, 2012

கிளறிய குப்பையில் கிளம்பிய பூதம்!



இவள் பாரதி

தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் குப்பைகள் மலையெனக் குவிந்து வருவதால், மக்களின் உடல்நலத்திற்கு உருவாகிவரும் ஆபத்துகள் பற்றி, ‘ஐயோ ஆபத்து!’ என்ற தலைப்பில் (காண்க: ‘புதிய தலைமுறை’ 12 ஜனவரி 2012 இதழ்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.  நாடு முழுக்க குவிந்து பெருகும் இந்தக் குப்பை பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், புதிதாகப் பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

அவை:
1971 முதல் 2011 வரையிலான கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான நகராட்சிகளிலும் (ஒருசில நகராட்சிகள் தவிர)

குப்பைகள் ஏலத்தில் விடப்படவில்லை.

ஒருசில நகராட்சிகளைத் தவிர மற்ற நகராட்சிகளுக்கு குப்பைகளால் எந்த வருவாயும் இல்லை.

விளைநிலங்களுக்கும் உரமாக செல்வது கிடையாது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் குழித்துறை, கரூர், தாராபுரம், இராஜபாளையம், சத்தியமங்கலம், திருச்செங்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய சில நகராட்சிகளில்மொத்தமே 15 லட்சம் ரூபாய் மட்டுமே குப்பைகளின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

வீணாக ஆற்றிலும், கடலிலும் கொட்டப்படுவதில்லை என்பது கூடுதல் தகவல்.

இத்தனை ஆண்டுகாலமாகவே குப்பைகள் பிரச்சினையில் அரசு மிக அலட்சியமாகவே இருந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இந்தத் தகவல்களை, தமிழகத்தில் இருக்கும் அனைத்து நகராட்சிகளிலும் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறார்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி.

தொடர்ந்து நல்லசாமி கூறும்போது, "மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பிரிக்க தமிழக அரசு வாங்கிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளால் முழுமையான பயன் உண்டா என்று தெரியவில்லை. மக்களும் அப்படி பிரித்துக் கொடுப்பதில் முழு ஆர்வம் காட்டவில்லை. அரசும் அதைப் பிரித்து எடுப்பதில் முனைப்புடன் செயல்படவில்லை. விளைவு- இதற்காக செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான தொகையும் தெருக்கோடியில் குப்பையாய் போய்விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுழற்சிமுறையில் கிராமங்களில் இருந்து தயாராகும் விளைபொருட்கள் நகரத்திற்கு விற்பனைக்கு வரும். நகரத்தில் வீணாகும் கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு கிராமத்திற்குப் போகும். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்தியபோது நாடு முழுக்க விளைச்சலும் நன்றாகவே இருந்திருக்கிறது. பின்னர் சிறிது சிறிதாக குப்பைகளுடன் பிளாஸ்டிக் சேர ஆரம்பித்துவிட்டதால்,அதைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்க முயற்சிக்காமல் செயற்கை உரத்திற்குத் தாவினார்கள் விவசாயிகள். இப்போது இயற்கை உரம் என்பதே அழிந்து போய், செயற்கை உரம் கோலோச்சிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவால், செயற்கை உரத்தால் தயாரான உணவுப் பொருட்களால் மக்களுக்கு உடல்நலக்கேடும், மக்கும் பொருட்களுடன், மக்காத பிளாஸ்டிக்கும் கலந்து நிலத்தையும், நீரையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுமாக இன்றுவரை பாதிப்புகள் தொடர்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் மேற்சொன்ன சுழற்சிமுறை பாதிக்கப்பட்டதே. இந்தச் சுழற்சி முறை மீண்டும் வரவேண்டும். மேலும் குப்பைகளை ஆறுகள், குளங்கள் மற்றும் கடலில் கொட்டவில்லை என்று நகராட்சிகள் சொல்வது நாடறிந்த பச்சைப்பொய் அல்லவா என்றார்" குமுறலுடன்.


குப்பைகளை பஸ்பமாக்கலாம்!
வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தோடு பெங்களூருவில் உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரம், ஆயிரம் கிலோ குப்பையைக் கொடுத்தால் 2 கிலோ சாம்பலாக வெளித் தள்ளும். இந்த இயந்திரத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என எந்த வகை குப்பையையும் போடலாம். ஆனால், அதில் சொட்டுத் தண்ணீர்கூட இருக்கக்கூடாது. வாட்டர் பாட்டில்களை போடும்போது தண்ணீர் இல்லாமல் போட வேண்டும். கடையில் வாங்கிய சாம்பார், சட்னி பாக்கெட் ஆகியவற்றை வெறும் பையாகப் போடவேண்டும். காந்தத் தொழில்நுட்பத்தோடு இயங்கும் இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் தேவையில்லை. இதன் விலை 7 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை. இதிலிருந்து கிடைக்கும் சாம்பலைக்கொண்டு பீங்கான் பொருட்கள் செய்ய முடியும். இதைக் கவனித்துக்கொள்ள அதிகமான ஆட்களும் தேவை இல்லை. இன்னும் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த இயந்திரம் நடைமுறைக்கு வரும்போது குப்பைகளை பஸ்பமாக்கி விடலாம்!


எந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கலாம்?
நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின்  அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.

எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.

எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.

1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.

5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.

7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.


இவள் பாரதி (நன்றி - புதியதலைமுறை, ஆகஸ்ட் 23, 2012)

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?